Friday, November 6, 2009

உயிர் சிந்தும் வேளையில்..


உடல் சிசைத்து உயிர் பிழியும் வெடியோசைகள் ஓயாமல் ஒலித்துக்கொண்டே இருந்தது. நேற்றுவரை வயல்ஏறி வரப்புகட்டி, தமக்கன்றி நாட்டுக்கே சோறிட்ட மருதநிலம் இன்று பாலையாக்கப்பட்டிருந்தது.
நாளை தொல்பொருள் ஆய்வாளர் வந்து புகுனியும், மனித நாகரிகம் இருந்ததன் தடம் எதுவும் இல்லை என்று பகரும் அளவுக்கு கோரமாக இருந்தது நிலம்.

ஆளும் ஒரு இனம் ஆளப்படுமினத்தை அடக்கியதன் காரணத்தினால் வந்த வினை இது! ஆண்ட இனம் மறுபடி ஆள நினைப்பதை எதிரினக்காரன் மட்டும் அல்ல, அயலில் உள்ளவர்களும் சேர்ந்து மறுதலித்த காரணத்தின் ரணங்கள் இவை.
போதிமரங்களில் எல்லாம் வெடிகுண்டு பொருத்தி கும்பிடும் ஒரு பொல்லாத இனத்தினுடன் வாழ்ந்த பாவத்திற்காய் இவர்களுக்கு கிடைத்த சாபங்கள் இவை.

முன்னாலே கேட்ட பெரும்வெடியோசைகள் தொடர்ந்து அதே முன்திசையில் பல தூரங்களில் இப்போ கேட்டுக்கொண்டிருக்கின்றது. மரணம் வரை சென்று மரணம் மறுதலித்து துப்பப்பட்ட இருவர், மரணம் நோக்கி ஏங்கிக்கொண்டிருந்தனர்.
ஆக்கிரமிக்க வந்தவனின் முனகல் “ஆணே தெய்யோ” (கடவுளே), தன் நிலத்தை இறுதிவரை காக்க நினைத்தவனின் முனகல், “ஐயோ என் நிலமும் மக்களும் அழிக்கப்படுகின்றார்களே, என்னால் தடுக்கமுடியவில்லையே”

பல சடலங்களின் நடுவே, அவைபோல ஆகப்போகும் இவர்கள் இருவர். தலை சரித்து ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்கின்றனர். கால் சிதைந்துபோய், நெஞ்செல்லாம் இரத்தம் வழிந்துகொண்டு, மரணம் இழுக்கும் பொழுதிலும் தன் மக்கள் பற்றி கவலையுறும் மறவனின், புலம்பல்கேட்டு, சிங்களத்து சிப்பாய் அதிர்ந்துபோனான்.

அனைத்தும் தெரிந்தும், வஞ்சகர்களின் வசப்பு வார்த்தை கேட்டுத்தானே இங்கே வந்தேன்! இதில் அதிசகிப்பதற்கு எதுவும் இல்லை, வாய் விட்டு சொன்னான் “என்னை மன்னித்துவிடு”. இறந்துபோன எதிரி இராணுவத்தின் உடல்களை மரியாதை செலுத்தி கொளரவப்படுத்தி அனுப்பும் உங்கள் பெருமைக்கும், கிடைக்கும் உங்களவர்களின் உடல்களில் ஒட்டுத்துணியில்லாமல் செய்து சந்திகளில் காட்டி சிரிக்கும் எங்கள் காடைத்தனத்திற்கும் உள்ள வித்தியாசம் எனக்கு எபபோதோ புரிந்துவிட்டது. என்னை மன்னித்துவிடு!!

புன்னகைத்துக்கொண்டே சிப்பாயை தலைசாய்த்து பார்க்கின்றான் தமிழ் மறவன்.
மன்னிப்பா! நீ என்ன செய்வாய்? வறுமை பிணி எடுக்க, குடும்ப்பப்பொறை சுமக்க, சாதேடி வந்தவன். நீயும் ஒருவகையில் தியாகிதானே!

மீண்டும் அதிர்ந்தான் சிங்களத்துச் சிப்பாய், அப்படியா நினைத்தாய்!!
நினைவில்க்கூட நல்லதுகாண்கிறாயே! கும்பிடப்போகும் விகாரையின் எங்கள் பத்தசாமிகூட “தமிழனை அழித்து குலப்பெருமை நாட்டவேண்டும்”, இது சிங்களவனின், பௌத்தனின்பூமி, அவன்மட்டுமே இதன் வல்லாளன் என்று நஞ்சூட்டுவான்.

பறவாய் இல்லை, இத்தனை நாளாக எவ்வளவு காட்டுமிராண்டியாக நான் இருந்திருக்கின்றேன். உன் இனத்தினோர், எத்தனைபேனை, என் விரல் நுனிகளின் ஆழுத்தும் துப்பாக்கியால் இரையாக்கினேன். ஆனால் என்னை நானே வெறுக்கும் நிலையில், உயிர் பிரியும்போதும் உன் எதிரி என்னை!! தியாகி என்கின்றாயே..

மீண்டும் தமிழ் மறவன் முகத்தில் புன்னகை.. இந்த தெளிவு முன்னமே உனக்கிருந்தால் இத்தனை வேதனைகள் தேவையில்லை சகோதரனே.
புத்தன் ஞானம் பெற்றது போதிமரம்தான், கீதை பிறந்ததும் யுத்த களம்தான், உன் கண்கள் திறந்தும், நீ உண்மை புரிந்ததும் யுத்த களம்தான்.
நீ பௌத்தனாக பிறக்கவில்லை, பௌத்தனாக வளர்க்கப்படவில்லை, வளரவும் இல்லை, பௌத்தனாக வாழவும் இல்லை. அனால் இப்போது நிற்சயம் நீ பௌத்தனாக மரிக்கின்றாய். பெருமைகொள்வாய் என்றான்.

திடீர் என இருவர் மட்டும் உயிர் ஊசலாடும் இடத்தில் ஒரு பெருஒளிவெள்ளம். வெள்ளம்படும் இடம் தமிழ்மறவன் இருப்பிடம். அவன் முகத்தில் ஒரு பரவச நிலை. விடைகொடு சகோதரனே. ஏன்று அவன் தலை சரிந்துகொண்டு சென்றது.
“தமிழீழத்தாயகம்” என்று அவன் சொல்லிமுடித்த அந்த வாசகம் அந்த இடமே அதிரும்படியாக இருந்தது. அவன் உயிருடன் அந்த ஒளிவெள்ளம் விண்நோக்கிப்போனது. மிச்சமிருந்தவன் இடத்தில் மட்டும் திடீரென இருள் சூழ ஆரம்பித்தது.

3 comments:

  1. சிறப்பாக இருக்கிறது. வித்தியாசமான, யதார்த்தமான அதேவேளை மிகத்துணிவான பதிவு இது. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. உணர்வுகளும் சிந்தனைகளும் சங்கமிக்கும்போது எழும் எழுத்துக்கள்.

    ReplyDelete
  3. ஆழமான அதேநேரம் அழகான சிந்தனை. அருமையான எழுத்துநடை.

    ReplyDelete