Tuesday, November 3, 2009

ஒரு கிராமத்தின் காலைப்பொழுது


தூரத்து பனங்கூடல்வழி புறப்படும் என் அற்றைப்பொழுதுகளில், துணையாக புறம்படும் பல சிந்தனைகள். மார்கழி மாத கூதிர்ப்பனி காலங்களில், பனிப்புகார்களின் ஊடாக தூரத்து காட்சியாக வைரவர்கோவிலை பார்த்துகொண்டு வயல்வரப்புகள் கடந்து வரும் சுகமும், காணும் கண்ணின் காட்சியும் அற்புதமானவை.

அந்தநேரம் கணீர் என காதுகளில் ஒலிக்கும் சுற்றுக்கோவில் மணிகளின் ரீங்காரங்களும், மெல்லமெல்ல, எட்டிப்பார்த்து கூட்டில் இருந்து உற்சாகமாகப்பறந்துவரும் பறவைகளின் வருகைகளும், நடக்கும்போது கால்களில் பன்னீர்தெளித்து சில்லிடவைக்கும் புற்களில்; தெறித்திருக்கும் பனித்துளிகளும் எவ்வளவு அற்புதமான அனுபவங்கள்.

இந்த சுகந்தம் தரும் அதிகாலையில், சால்வையால் உடலைப்போர்த்திக்கொண்டு இரண்டு கைகளையும் மிக இறுக்கமாகக்கட்டிக்கொண்டே, மெல்லிய மங்கலான வெளிச்சத்தில் இயற்கையும் சொந்த நிலமும் தரும் சுகங்களையும் அனுபவிப்பவனே தன் பிறப்பின் அர்த்தங்களை அனுபவிப்பவனாக இருப்பான்.

மெல்லமெல்ல நடந்துவரும்வேளைகளில் சற்றுத்தொலைவில் ஊரின் பிரதான சாலையில் அன்றைய முதலாவது பேருந்து கடந்துசெல்லும் சத்தமே ஒருவித இனந்தெரியாத சந்தோசத்தையும் மனதுக்குள் தந்துவிட்டுப்போகும்.
குடிமனைகளில் ஒவ்வொரு வேலிகளின் மேலும் தலையில் முண்டாசை சுற்றிக்கொண்டு பல்துலக்கும்; பெரியவர்களின் தலைகள் மெல்ல மெல்ல முளைக்கத்தொடங்கும்.

ஊர் சுறுசுறுப்படையத் தொடங்கும் வேளைக்கு முன்னதாகவே, குளக்கரை ஓரமாக சுதந்திரமாக இயற்கையின் கடன்களை முடித்துவிட்டு, வேப்பங்குச்சியால் பல்துலக்கி பக்கத்தில் மழைநீர் தேங்கி சில்லிடவைக்கும் ஏரியில் குளித்துவிட்டு, ஈரவேட்டியில் இருந்து, சுற்றிவந்த சால்வைக்கு மாறி, வேட்டியை பிழிந்துவிட்டு கையில் ஏந்தியவாறு வீடுநோக்கிவரும்போது, காலைவேளை காட்சிகள் அற்புதமாக மனதில் பதியும், குருவிகளின் கீச்சிடல்களும், அணில், புறாக்களின் சத்தங்களையும் கேட்டுக்கொண்டு வீடுநோக்கி நடக்கும்போது அப்பப்பா…எப்படி ஒரு கம்பீரம் மனதுக்குள் வந்துவிடும்.

வயல்வேலைகளுக்கு புறப்படும் “உலகைச்சுமக்கும் உழவர்களை” கடந்து, அலுவலக வேலைக்ளுக்கு செல்வதற்காக அதற்காகவே பிரதான வீதிக்குவரும் இரண்டாவது வண்டியை பிடிக்க செல்லும் அலுவலகர்களைத்தாண்டி, கீச்சிடும் குரல்களுடன், குழுக்களாக உற்சாகமாக பள்ளிசெல்லும் குழந்தைகளைத்தாண்டி, சைக்கிள் மணியை கிலுங்கச்செய்து கடிதம் கொண்டுவரும் தபால்க்காரரை தாண்டி, கோயில்பூசை முடித்து வீடு திரும்பும் அர்ச்சகரை தாண்டி, தேனீர்க்கடை தாண்டி, சுறுசுறுப்பாக தொழிலில் அப்போது இறங்கியிருக்கும் பலசரக்கு கடையினை தாண்டி, சுடச்சுட பெட்டியில் பாண் கொண்டுவந்து இறக்கும் வெதுப்பகக்காரரை தாண்டி,

இப்படி அதிகாலையில் உற்சாகங்கள் அத்தனையும் தாண்டி கையில் ஒரு பத்திரிகையும் வாங்கி வீடுவந்து சேரும்போது, இந்த காலைவேளையில் கண்ணுக்கும் மனதுக்கும் எத்தனை சந்தோசமான காட்சிகள் கிடைத்துவிடுகின்றன.

வந்தவுடன் பனங்கட்டியுடன், சுடச்சுட ஆவி பறக்க தேனீர் தரும் மனைவியின் மங்களகரமான முகத்தினை பார்த்து புன்னகைத்தபடியே, வாங்கிப்பருகி, பத்திரிகை படிக்கும்போது, சுளகில் குற்றி உடைத்த பயறுபோக, குறுனலாகியவற்றை தெரிந்தெடுத்து, தேங்காய்ப்பூவும் போட்டு, வெல்லத்துடன் கலந்து குழைத்து கொண்டுவருவாள் மனையாள். இதை சாப்பிடும் போது…..

நிறுத்துங்கள் தாத்தா..!!

என்று கத்தியே விட்டான் விமலன். உயர்பாதுகாப்பு வலயம் என்ற பெயரிலே ஆக்கிரமிப்புக்குள்ளான அந்த நிலத்தின் பெருமைகளை, பிறந்ததிலிருந்து இதுவரை பார்க்காமல், இந்த முள்வேலிக்குள்ளும், சுற்றிவர வேதனைகளுக்குள்ளும்; இருந்துகொண்டு இதற்கு மேலும், தான் அறியாத தன் ஊரின் விடியல்காட்சி பற்றி கேட்க அவன் தயாரில்லை…..
சர்வேசன்500 - நச்னு ஒரு கதை 2009 - போட்டி

17 comments:

  1. கதையின் ஓட்டத்தை என்னால் முன்னமே கொஞ்சம் அனுமானிக்க முடிந்தது.ஆனாலும் நல்ல எழுத்துநடை உங்களுக்கு. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. சிறப்பான உணா'வோட்டமான ஒரு எழுத்துநடை. அனுபவித்து எழுதியுள்ளீர்கள். ஆழமானதொரு கரு, இறுதியில் சிறுவனின் மனநிலையில் நெஞ்சில் நச் என்று ஒரு வலி ஏற்படுகின்றது. வாழ்த்துக்கள் நண்பரே. ஆரம்பமே அசத்தலாக உள்ளதே.

    ReplyDelete
  3. ஆதித்தியன்November 3, 2009 at 9:32 AM

    உணர்வோட்டமான கதை. அருமையான எழுத்துநடை, கிராமத்துவாழ்வில் ஏதும் திடீர் திருப்பமாக இருக்குமோ என எதிர்பார்த்து வாசித்துவருகையில் கிராமமே தொலைந்துபோன கதை என்பது மனதில் "சுர்" என இருக்கின்றது.

    ReplyDelete
  4. இது வெறும் கதையல்ல..முள்வேலியில் நடந்திருக்கக்கூடும்.......

    ReplyDelete
  5. நல்லகதை ஓட்டம். திடீர் திருப்பம். முதல்பதிவிலேயே கோதாவில் குதித்துவிட்டீர்களா? சபாஷ் உங்கள் நேர்மை எனக்கு பிடித்திருக்கின்றது.

    ReplyDelete
  6. என்ன கதை கொஞ்சம் மெதுவா போகுதேன்னு நினைச்சிக்கிட்டு இருக்கும்போது கடைசில ஒரே தூக்கா தூக்கிட்டிங்க..

    நல்ல எழுத்துநடை..நல்ல கதை..ஜெயிக்கிறீங்களோ இல்லையோ..நல்ல கதை கொடுக்கிறதுல வென்றுவீட்டீர்கள்

    வாழ்த்துகள்

    அன்புடன்,
    சுவாசிகா
    http://ksaw.me

    ReplyDelete
  7. //கதையின் ஓட்டத்தை என்னால் முன்னமே கொஞ்சம் அனுமானிக்க முடிந்தது//

    நன்றிகள் அடலேறு. ஈழத்து பதிவர்களிடமிருந்து சோகம்தானே வரமுடியும்?

    ReplyDelete
  8. //சிறப்பான உணா'வோட்டமான ஒரு எழுத்துநடை. அனுபவித்து எழுதியுள்ளீர்கள்//

    நன்றிகள் ஜனா அண்ணா.

    ReplyDelete
  9. //கிராமமே தொலைந்துபோன கதை என்பது மனதில் "சுர்" என இருக்கின்றது//

    நன்றிகள் ஆதித்தியன்

    ReplyDelete
  10. //இது வெறும் கதையல்ல..முள்வேலியில் நடந்திருக்கக்கூடும்.......//

    தாங்கள் சொன்னதுபோல நடந்துகொண்டிருக்கும்கதைதான் இது.
    நன்றிகள் புலவன் புலிகேசி

    ReplyDelete
  11. //Nice Story... Best Wishes !!!//

    Thank you for your Kind wishes and grate Comment.
    ராம்குமார் - அமுதன்

    ReplyDelete
  12. //சபாஷ் உங்கள் நேர்மை எனக்கு பிடித்திருக்கின்றது//

    நன்றி நண்பர் டிலான். உங்கள் சொல்லாண்மையுடன் கூடிய எழுத்தான்மை எனக்கு பிடிச்சிருக்கு.

    ReplyDelete
  13. //ஜெயிக்கிறீங்களோ இல்லையோ..நல்ல கதை கொடுக்கிறதுல வென்றுவீட்டீர்கள்//

    நன்றி சுவாசிகா
    தங்கள் வருகையாலும், பின்னூட்டலாலும் மகிழ்ச்சியடைகின்றேன்.

    ReplyDelete
  14. இதை கதையாக மட்டும் பார்க்க இயலவில்லை. அருமை.

    ReplyDelete
  15. கடைசியில் திடீர் திருப்பம் தந்தீர்கள் நல்ல கரு..

    வாழ்த்துக்கள்.

    கதை போட்டியில் "அடுத்த வீட்டு பெண்" என்ற எனது கதை படிக்க blog-க்கு வருகை தரவும்: http://veeduthirumbal.blogspot.com/.

    மோகன் குமார்

    ReplyDelete
  16. நல்ல விவரணை என்று சொல்லக் கூட கூச வைக்கும் நிலைமை...
    வாழ்த்துக்கள்...

    ReplyDelete